Tuesday, September 23, 2008

நட்புக்கவிதை (எங்கள் இனிய நட்பு பற்றி திரு.அன்பு அவர்கள் எழுதிய கவிதை)


நண்பனே,
உன்னைச்சுற்றியே என்
உலகம் உருள்கிறது...
உலகியலோடு ஊர் உருள
உள்ளீடற்ற உன் உறவுக்குள் மட்டுமே
நான் உருகுகிறேன்.

வாழ்வுப்பேருந்தில் என்னை நீ எப்போதும்
சன்னலோரப்பயணியாக்கி விடுகிறாய்

உன்னோடு இருக்கின்ற ஒரு சில நாழிகையை
பின்னோடும் உன் நினைவுக்கட்சிகளாய்
என் கண்ணோடு நிறுத்துகிறேன் கவலை நீங்க
பண்ணோடு பழந்தமிழ் கேட்டபின்பும்
என்னோடு உறைகின்ற இசையைப்போலே!

சப்பாத்திப்பழமென்ற நட்பை
முள் அறுத்துத்தோல் நீக்கி
பலருடன் பலமுறை புசித்திருக்கிறென் - ஆனால்
உண்டபின்பு உள்நாவில்
முரண்பாடென்ற முள்விதைகளால்
முடிந்துபோனவை ஏராளம்.

தேடுங்கள் கண்டடைவீர்கள்
என்கிறது ஆகமம்!
நாம் பழகித்திரிந்த நாட்களை எங்கு தேட!

தினமும் உயித்தெழுதலோடு
என்றைக்குமாய் உன்நினைவுகள் என்னோடு இருப்பதாக...

ஆமென்!

No comments: