Tuesday, May 19, 2009

இன்று தேவதைகள் தினம்

சூரியனின்
ஒளிக்கற்றைகளுக்கு
வெளிச்சம்
கொடுத்தவள் நீ!!!

தேவதைகளால்
ஆசிர்வதிக்கப்பட்ட
ஒரு தினத்தில் நீ
பிறந்தாயாம்.

நீ பிறந்த நாளின்
இரவில் பெருமழை
பெய்து உலகம் செழித்ததென்றும்
வானவில் தன் நிறங்களை
மறைத்துக் கொண்டதென்றும்
அரியவகை குறிஞ்சி
மலர்கள் பூத்துக்குலுங்கியதாகவும்
சோதிடர்கள்
சொல்லித்திரிகிறார்கள்...

























உலகின் முதல் இசை
உன் முதல்
அழுகையிலிருந்து
பிறந்ததென்றும்
ஏழு ஸ்வரங்களின்
முதலெழுத்தை உன்
பெயரின் முதலெழுத்திலிருந்து
தொடங்கியதாகவும்
இசைஞானி சொல்லிக்
கேட்டதாய் ஞாபகம்!!!

உன் ஒவ்வொரு
பிறந்தநாளன்றும்
உன்னைச் சேர்கின்ற
பூக்களைத்தவிர
மற்றவை நிறமிழந்து
போவதாய்
பூக்கடைக்காரன்
புலம்புகிறான்...

உன் பிறந்தநாளொன்றில்
நீ முத்தமிட்ட
குழந்தையொன்று
கடவுளை
கண்முன்னே கண்டதாய்
தன் தாயிடம்
சொல்லிக்கொண்டிருந்தது!!!

பிறிதொரு
உன் பிறந்தநாளில்
கடல் தன் பேரிரைச்சலை
நிறுத்திக்கொண்டதாகவும்
புயலொன்று உருவாகி
தென்றலாய் மாறிப்போனதாகவும்
வானிலை அறிக்கை
வாசிக்கப்பட்டது...

உன் ஒவ்வொரு
பிறந்தநாளன்றும்
ஒரு லட்சம்
ஆப்பிள் மரக்கன்றுகள்
நட்டு வளர்க்க அரசாங்கம்
ஆணையிடப்போவதாய்
கேள்வி!!!

உன்னைப்பொருத்தவரை
இன்று உனக்கு
பிறந்தநாள்,
உலகத்திற்கு
தேவதைகள் தினம்!!!