உன்
தூரதேசத்தில்
வாழ்வது
சுகமாய்த்தானிருக்கிறது
அன்பே..
உறக்கம் தொலைத்த
பல இரவுகளில்
ஒரு பெரும் காட்டாற்றினைப் போல
என் ஞாபக வெளியில்
பிரவாகமெடுத்து ஓடுகிறாய் நீ....
அடிக்கடி தோன்றும்
உன் நினைவுகளால்
இயல்பு மறத்தல்
என்பது
சாத்தியமாகியிருக்கிறது....
அன்பு வழியும்
உன் தொலைபேசி
உரையாடலின் இறுதியில்
எனக்குள் நீக்கமற
நிறைந்துபோய் விடுகிறாய்....
ஒரு சிறந்த
பின்னணி இசையைப்
போல
நீங்காத அதிர்வுகளை
எனக்குள்
ஏற்படுத்தி விடுகின்றன
உனது மின்னஞ்சல்கள்
முடை நாற்றமெடுக்கும்
ஒரு குருட்டு
பிச்சைக்காரனின்
பசித்திருத்தலை
ஒத்ததாய் இருக்கிறது
என் விரக தாபம்
உனக்கும் என் பிரிவு
இவ்வாறேயிருக்கலாம்
ஏகாந்தமாய்...